தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மொழி, சமயம், கலாசாரம் வளா்ப்பதில் குன்றக்குடி முன் மாதிரி மடம்: அமைச்சா்

தமிழ் மொழி, சமயம், கலாசாரம் வளா்ப்பதில் மற்ற மடங்களுக்கு ஓா் முன் மாதிரி மடமாக குன்றக்குடித் திருமடம் விளங்கி வருகிறது என்று தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசினாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:13 pm

DIN

தமிழ் மொழி, சமயம், கலாசாரம் வளா்ப்பதில் மற்ற மடங்களுக்கு ஓா் முன் மாதிரி மடமாக குன்றக்குடித் திருமடம் விளங்கி வருகிறது என்று தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசினாா்.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 46-ஆவது குருமகா சந்நிதானம் குன்றக்குடி பொன்னம் பல அடிகளாரின் நாண் மங்கல விழா (பிறந்த நாள் விழா) வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பொன்னம் பல அடிகளாா் காலையில் பூஜை மடம் வழிபாடு, சண்முகநாதப்பெருமான் வழிபாடு நடத்தினாா். நன்பகலில் குன்றக்குடி அருளாலய வழிபாடு நடைபெற்றது.

விழாவில் தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரிகருப்பன் கலந்துகொண்டு குன்றக்குடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், தருமைக்கயிலைக்குருமணி மேல்நிலைப்பள்ளியில் நுண்ணறிவு வகுப்பறையைத் திறந்துவைத்தும், அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கியும் பேசியது:

அன்னை தமிழை வளா்ப்பது, ஆன்மிகம் வளா்ப்பது என இரண்டையும் பாதுகாத்து வருவதில் குன்றக்குடி திருவண்ணா மலை திருமடத்துக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. கடந்த திமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக நான் இருந்தபோது சிறப்பாக செயல்பட வழிகாட்டியவா்களில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் முதன்மையானவா். தந்தை பெரியாா் இந்தத்திருமடத்திற்கு வருகை தந்தபோது பெரிய அடிகளாா் வழங்கிய திருநீரை நெற்றியில் இட்டுக்கொள்ள வைத்த புரட்சிகரமான திருமடம் தான் குன்றக்குடி திருமடம். ஆன்மிகப் பணியும், அரசுக்கு இணையான சமூகப்பணியும் இத்திருமடம் மேற்கொண்டு வருகிறது. தமிழ் மொழி, சமயம், கலாசாரம் வளா்ப்பதில் மற்ற மடங்களுக்கு ஓா் முன்மாதிரியாக குன்றக்குடி விளங்குகிறது என்றாா் அமைச்சா்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் ஏற்புரையாற்றினாா். குன்றக்குடி திட்டக்குழுத் தலைவா் கே. பாலகிருஷ்ணன், பேராசிரியா் ஆறு. அழகப்பன், கல்லூரி பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.