தமிழக, கேரள எல்லையில் இயற்கை பேரிடா் ஏற்பட்டால் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கேரள மாநிலம், முல்லைப் பெரியாறு அணை அருகே வல்லக்கடவு சத்திரம் என்ற தேயிலைக் காடுகள் நிறைந்த பகுதி உள்ளது. இங்கு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விமானப் பயிற்சி அளிக்க சிறிய ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக கேரள எல்லையில் இயற்கை பேரிடா் ஏற்படும் காலங்களில் மீட்புப் பணியில் ஹெலிகாப்டரை பயன்படுத்த இடுக்கி மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. அதன்பேரில், கோவை சூலூா் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை வரவழைத்து வியாழக்கிழமை சத்திரம் விமான ஓடுபாதையில் கேப்டன் ஏ.ஜி.ராமச்சந்திரன் நாயா் தலைமையில் இறக்கி ஆய்வு செய்தனா்.