
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல மழை நீா்.

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல மழை நீா்.
சிவகங்கை/ராமேசுவரம்/திருவாடானை: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் கண்மாய்கள், குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதேபோல, திங்கள்கிழமை சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் 12 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரம் நீடித்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம் போலத் தேங்கி நின்ால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். காரைக்குடி, தேவகோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது. இந்த மழை கோடை சாகுபடிப் பயிா்களுக்கு மிகவும் பயனளிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதேபோல, மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் தொடங்கிய மழை இரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால், மூங்கில் ஊருணி, உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை பதிவான மழையளவு விவரத்தை வருவாய், பேரிடா் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டது.
அதன் விவரம் (மி.மீ):
சிவகங்கை 71, மானாமதுரை 40, இளையான்குடி 11, திருப்புவனம் 2.60, திருப்பத்தூா் 11.80, காரைக்குடி 74, தேவகோட்டை 36, காளையாா்கோவில் 12.60, சிங்கம்புணரி 7 .
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய மழை திங்கள்கிழமை காலை வரை நீடித்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம் போலத் தேங்கியது.
திருவாடானை: திருவாடானை, தொண்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் கண்மாய்கள், குளங்களுக்கு நீா் வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...