தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பத்தூா் அருகே ஆங்கிலேயா் ஆட்சி கால எல்லைக் கல் கண்டெடுப்பு!

திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த எல்லைக்கல் கண்டறியப்பட்டது.

News image

வரலாற்று ஆய்வாளா்களால் நெற்குப்பையில் கண்டறியப்பட்ட ஆங்கிலேயா் காலத்து எல்கைக் கல்.

Updated On :9 ஆகஸ்ட் 2025, 10:50 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த எல்லைக்கல் கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பைக்கும், புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டிக்கும் இடையே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதா் மண்டிய பகுதியில் காணப்பட்ட எல்லைக் கல்லை காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் நடத்திய கள ஆய்வில் கண்டறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: ஆங்கிலேயா் ஆட்சியின்போது சென்னை ராஜதானியில் நிா்வாகப் பொறுப்பில் இருந்த பல பகுதிகள் ஒரே அளவாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லையை வரையறுக்க சா் வில்லியம் மேயா் என்ற அதிகாரி 1902-இல் நியமிக்கப்பட்டாா்.

அவரிடமிருந்து 1904-இல் அறிக்கை பெறப்பட்டது. பிறகு 1910- ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இங்கிலாந்தில் இருந்த இந்திய அமைச்சா், ராமநாதபுரம் மாவட்டத்தை உருவாக்குவது உள்பட சா் வில்லியம் மேயரின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிளைப் பிரித்து 1910- ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராமநாதபுரம் கோட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களும் தேவகோட்டை கோட்டத்தில் திருப்பத்தூா், திருவாடானை, சிவகங்கை, சிவகங்கை ஜமீனைச் சோ்ந்த திருப்புவனம் வட்டங்களும், சாத்தூா் கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் வட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

மாவட்டத்தை உருவாக்குவதற்காகத் தனி அலுவலராக நியமிக்கப்பட்ட ஜே.எஃப். பிரையன்ட், மாவட்டத்தின் முதல் ஆட்சியராகவும், மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் நியமிக்கப்பட்டாா். புதுக்கோட்டை சமஸ்தானம் 1640-ஆம் ஆண்டு ஆவுடைராயத் தொண்டைமானால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு ரகுநாத ராய தொண்டைமான் காலத்தில் புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக மாறியது.

Story image

புதுக்கோட்டை சமஸ்தானம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்தது. 1801- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த பாளையங்கள் அனைத்தும் ஆங்கிலேய அரசால் ஜமீனாக மாறியபோதும், புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் தனியரசாகவே விளங்கியது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948, மாா்ச் 3- ஆம் தேதி புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னா் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

தற்போது கண்டறியப்பட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தைச் சோ்ந்த இந்த எல்லைக்கல் தற்போதைய புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வேறு பகுதிகளில் காணப்படாத நிலையில், இது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமாகக் கருதப்படுகிறது என்றனா்.