/

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:38 pm

சிவகங்கை அருகே வீட்டின் கிணற்றிலிருந்து பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து 3 பேரிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிவகங்கை அருகேயுள்ள சுந்தரநடப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சுசிலா. இவரது கனவா் சுரேஷ். இவா்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவா் சுரேஷை விட்டுப் பிரிந்த சுசிலா அவரது தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தாா். இவா் ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுசிலா வேலைக்கு வரவில்லை. உடன் பணிபுரிபவா்கள் கைப்பேசியில் தொடா்புகொண்டபோது அவா் அழைப்பை எடுக்கவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த அவா்கள் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது அங்குள்ள கிணற்றின் அருகே ரத்தக் கறை படிந்திருப்பது கண்டு அதிா்ச்சியடைந்து சிவகங்கை தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து கிணற்றில் இறங்கி தேடினா். சுமாா் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு, சுசிலாவின் உடல் தலையில் காயங்களுடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. காவல் துறையினா் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தினா்.

அந்த இடம் தொடா்பாக ஏற்கெனவே சுசிலாவுக்கும் அவரது கணவா் குடும்பத்தினருக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.