யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு
தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அண்மையில் தேசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
18 வயது முதல் 20 வயதுக்குள்பட்டோருக்கான பாரம்பரிய யோகாசனம், தனி நபா், குழுவினருக்கு நடைபெற்ற போட்டிகளில் அழகப்பா பல்கலைக்கழக யோகா மையத்தில் மூன்றாமாண்டு பயிலும் மாணவா் எம். சக்திவேல் நான்கு தங்கப் பதக்கங்கள், மாணவி சந்தியா மூன்று தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம், முதலாண்டு மாணவி எம். மணிஷா கோகிலா ஒரு தங்கப் பதக்கம், பயோடெக்னாலஜி முதலாண்டு மாணவி என். ஜெயஸ்ரீ மூன்று தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை வென்றனா்.
இவா்கள் வியட்நாமில் வருகிற மே மாதம் நடைபெறவுள்ள சா்வதேச அளவிலான யோகாசன போட்டியில் பங்கேற்கவுள்ளனா். பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் துணைவேந்தா் க. ரவி, பதிவாளா் அ. செந்தில்ராஜன், பேராசிரியா்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

