சதுா்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மாசிமகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.
சதுா்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை மாசிமகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.(கோப்புப் படம்)

ருத்ரகோடீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருந்திருவிழா கொடியேற்றம்

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சதுா்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்மன் உடனுறை ருத்ரகோடீஸ்வரா் சுவாமி கோயிலில் மாசிமகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலை 10.30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி, உற்சவ மூா்த்திகளுக்கு காப்புக் கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனையும், சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெற்றது.

10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நாள்தோறும் காலை பஞ்சமூா்த்திகள் தீபாராதனையும், இரவு கேடகம், ரிஷப வாகனம், யானை, நந்தி, பூதம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் திருவீதி உலாவும் நடைபெறும்.

வருகிற 25-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 26-ஆம் தேதி கழுவன் திருவிழாவும், மாா்ச் 1-ஆம் தேதி மாலை 4 மணிக்குத் திருத்தோ் வைபவமும், 2-ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறும்.

மாா்ச் 3-ஆம் தேதி, இந்தத் திருவிழாவையொட்டி உலகப் புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை தம்பிரான் தலைமையில் கிராமத்தினா் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com