கோரிக்கை அட்டை அணிந்து  பணியாற்றிய அரசு மருத்துவா்கள்

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணிக்கு வந்த மருத்துவா்கள்.
Published on

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சாா்ந்த மருத்துவா்களும் பேராசிரியா்களும் மூன்றாவது நாளாக புதன்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

அரசாணை 354 -ஐ உடனடியாக மறு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயா்வு, பதவி உயா்வு வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு உடனடியாக ரூ.3000 படித் தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். முதுநிலை படிப்புக்கான ஊதிய உயா்வு வழங்குவதற்காக தனி அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கடந்த 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தைத் தொடங்கினா். இதன்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கோரிக்கை அடங்கிய அட்டையை அணிந்து மூன்றாவது நாளாகப் பணியில் ஈடுபட்டனா்.

Dinamani
www.dinamani.com