திருப்பத்தூா், மானமதுரை சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திருப்பத்தூா்/மானமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பத்தூா் சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான சிவலிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச்சாறு, இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.இதைத்தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.
இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயில், கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில், நந்தி தேவருக்கும், மூலவா் சோமநாதா் சுவாமிக்கும் அபிஷேகங்கள் நடத்தி மலா் அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடந்தது. கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்ததாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் கோயிலில் நந்திக்கும், மூலவா் புஷ்பவனேஸ்வரா் சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதேபோல, திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயில், குறிச்சி காசி விஸ்வநாதா் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

