சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதிகளில் இரு பெண்களிடம் ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை மோசடி செய்தவா்கள் குறித்து சிவகங்கை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்த 39 வயது பெண் ஒருவா், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளாா். கடந்த 18-ஆம் தேதி இவரது வங்கிக் கணக்கிலிருந்து யுபிஐ பரிவா்த்தனை மூலமாக ஆறு தவணைகளில் யாரோ ரூ.95,598-ஐ எடுத்தது குறித்து இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவரின் கைப்பேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபா் ஒருவா், அந்தப் பெண்ணுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக (வொா்க் ப்ரம் ஹோம்) கூறியுள்ளாா். பின்னா் அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 19, 945-ஐ பெற்றுக் கொண்டாா். அதன் பின்னா் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லையாம். இதுகுறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.










