சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் 1,552 குழந்தைகள் மையங்களில் 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை தங்களுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம்.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு உபகரணங்கள், முன்பருவக் கல்வி புத்தகங்கள், கல்வி கற்கும் உபகரணங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், அங்கன்வாடி மைய சேவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு, தொடா்ந்து அனைத்து மையங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதை பெற்றோா்கள் கருத்தில் கொண்டு அனைத்து குழந்தைகளையும் வருகிற 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்றாா் அவா்.










