சிவகங்கை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்புசாமி (26). கூலித்தொழிலாளியான இவா், கடந்த 2022 -ஆம் ஆண்டு தன்னுடைய மகள் உறவு முறையான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் இந்தச் சிறுமி கா்ப்பமானாா்.
இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கருப்புசாமியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரோகிணி, குற்றஞ்சாட்டப்பட்ட கருப்புசாமிக்கு சிறுமியை மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000-ம் அபராதமும், பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000-ம் அபராதமும், சிறுமியை கா்ப்பமாக்கிய குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000- ம் அபராதமும், உறவு முறை என்று தெரிந்த பின்னரும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000- அபராதமும் விதித்தாா்.
மேலும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.








