ஆண்டிபட்டி தனியார் வங்கி மேலாளருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் ஐசிஐசிஐ என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது ஆண்டிபட்டி நகரில் பாப்பம்மாள் புரம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகள் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த வங்கியில் பணிபுரிந்த 9 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வங்கியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்த வங்கிக்கு வந்து சென்ற பொதுமக்கள் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.