போடி அருகே ஞாயிரன்று மலைத்தேனீ தாக்கி காவலர்கள், வனத்துறையினர் 7 பேர் காயமடைந்தனர்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு போடி நாகலாபுரம் அருகே மல்லிங்கர் கரட்டில் உள்ள மல்லிங்கேசுவரர் திருக்கோயிலிலும் தீபம் ஏற்றுவது வழக்கம். இந்தக் கோயில் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று மலைக்குன்றில் அமைந்துள்ள கோயிலை அடைய வேண்டும். கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் செல்வதற்காக வனப்பாதையை சுத்தம் செய்வது வழக்கம்.
இதற்கான பணிகளை செய்தபோது இதனை கண்காணிப்பதற்காக காவல்துறையினர், வனத்துறையினர் அங்கு சென்றிருந்தனர். அப்போது வனப்பாதையில் மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீ கூடு கலைந்தது. இதில் மலைத்தேனீக்கள் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கத் தொடங்கியது. பணியாளர்கள் தப்பித்த நிலையில் அங்கிருந்த காவல்துறையினர், வனத்துறையினரை தாக்கியது.
இதில் போடி தாலுகா காவல் நிலைய காவலர்கள் சதீஸ் (30), திருக்கலா (29), போடி வனத்துறையினர் தெய்வேந்திரன் (41), ருத்ரமூர்த்தி (24) ஊர்க்காவல் படையை சேர்ந்த கார்த்திகேயன் (23), விஜயகுமார் (24), ஆனந்த் (29) ஆகிய. 7 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து இங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் பக்தர்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.