முல்லைப் பெரியாற்றில் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் குளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்த இளைஞர் திடீரென ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை அடுத்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான மீட்புப் படையினர் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடி வந்தனர்.
ஆற்றின் நீர் வரத்து அதிகமாக இருந்ததாலும், வெளிச்சம் குறைந்ததாலும் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட 1,755 கன அடி நீர் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து திங்கள்கிழமை காலையில் நீர்வரத்து குறைந்ததால் உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினர் 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.