முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு 138 அடியை எட்டியதால், பொறியாளர்கள் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையில் வியாழக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 138.05 அடியை எட்டியது, (மொத்த உயரம்142). நீர் இருப்பு 6,635 மில்லியன் கன அடி, நீர் வரத்து விநாடிக்கு, 3,522 கன அடி, விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் 28.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 40.0 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பெரியாறு அணை உதவி பொறியாளர் பி.ராஜகோபால், தேக்கடி பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து தேனி, இடுக்கி மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டார். இதனை முன்னிட்டு கரையோரப்பகுதியில் வாழும் மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மின் உற்பத்தி அணையிலிருந்து விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா, 40 மெகாவாட் என மொத்தம், 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.