தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு தடையை மீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக சுருளி அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் தர்ப்பணம், நேர்த்திக்கடன் கடன், சாமி தரிசனம் மற்றும் விழாக்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இதையும் படிக்க | காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் 300 பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி
ஆனால் தடையை மீறி சுருளி அருவிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரனுக்கு புகார்கள் வந்தன.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நடமாடியதை கண்டறிந்தார்.
இதுகுறித்து கம்பம் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவும், முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆர்சியர் உத்தரவிட்டார். எனினும் ஆடி அமாவாசை உள்ளிட்ட நாள்களில் தடையை மீறி கூட்டம் வந்தது.
இதன்காரணமாக சுருளி அருவி மற்றும் வளாக பகுதிகளில் பொதுமக்கள் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், தடையை மீறி வருபவர்கள் மீது காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பேரில் சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கும் விதமாக சுருளிப்பட்டி ஊராட்சி பணியாளர்கள், ராயப்பன்பட்டி காவல்துறயினர் சார்பில் சுருளி அருவி சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சுருளி அருவிக்கு வருபவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.