தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை முதல் ஏலம் நடைபெற்று வரும் நிலையில், ஏலம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிறுத்தம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த இரு இடங்களில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கடைகளுக்கான பொது ஏலம் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இதையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனிடையே இந்த ஏலம் முறையாக நடத்தப்படவில்லை எனக் கூறி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். என்றாலும் மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.