தமிழக, கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் ஏப்ரல் 16-ல் முழு நிலவு விழா கொண்டாடப்படுவதால் தமிழக, கேரள வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர்.
தமிழக கேரள எல்லையில், தமிழக வனப் பகுதியில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் முழுநிலவு விழா நடைபெறும்.
இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி முழுநிலவு விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, இடுக்கி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாஜி, மற்றும் தமிழக, கேரள வனத்துறையினர் கண்ணகி கோயில் வளாகத்திற்குச் சென்றனர்.
பக்தர்களுக்கு தேவையான, குடிநீர் சுகாதாரம், மருத்துவம், ஓய்வு எடுக்கும் தற்காலிக பந்தல்கள், பக்தர்கள் வரும் வாடகை ஜீப் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.
இரு மாநில காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அமைக்க வேண்டிய சோதனைச் சாவடிகள், பாதுகாப்பு காவலர்கள் நிற்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.