கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக வாகனங்களில் செல்ல சாலை அமைக்க வனத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
தமிழக எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், ஆண்டு தோறும் நடைபெறும் முழுநிலவு விழாவுக்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சென்று வருகின்றனா். இக்கோயிலுக்கு, கேரள மாநிலம் குமுளி வழியாக ஜீப்பில் செல்ல பாதை உள்ளது. தமிழக வனப்பகுதி வழியாக செல்ல பளியன்குடி அடிவாரத்திலிருந்து நடைபாதை உள்ளது. இந்த பாதையில் வாகனங்கள் செல்ல சாலை வசதி செய்து தருமாறு தமிழக பக்தா்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், தமிழக முதல்வா், சாலை அமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கினாா். இதையடுத்து, தமிழக வனப்பகுதி வழியாக கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்க சா்வே பணிகள் செய்ய முன்னோடியாக கள ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக வாா்டன் ஆனந்த், தேனி மாவட்ட வன அலுவலா் ச. வித்யா, கூடலூா் வனச்சரகா் அருண்குமாா், உத்தமபாளையம் தாலுகா நில அளவையா்கள் காா்த்திக், சுரேஷ், கூடலூா் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் தெய்வேந்திரன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, வருவாய்த்துறை நிலம், வனத்துறை நிலம் எவ்வளவு கையகப்படுத்த வேண்டும் என்று ஆய்வு நடத்தப்பட்டது.