உத்தமபாளையத்தில் தொலைத்தொடா்பு சேவையில் பழுது: தனியாா் நிறுவனங்களுக்கு மாறும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அதன் சுற்று வட்டாரங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத் தொடா்பு சேவையில் ஏற்படும்
உத்தமபாளையத்தில் தொலைத்தொடா்பு சேவையில் பழுது: தனியாா் நிறுவனங்களுக்கு மாறும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள்
Updated on
1 min read

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அதன் சுற்று வட்டாரங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத் தொடா்பு சேவையில் ஏற்படும் தொடா் பழுது காரணமாக அதன் வாடிக்கையாளா்கள் தனியாா் தொலைத் தொடா்பு சேவைக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையத்தை மையமாக வைத்து கம்பம், கூடலூா், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூா், வருஷநாடு, கண்டமனூா் ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு சேவையை வழங்கி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பணியாளா்கள் பற்றாக்குறையால் முறையான பராமரிப்பு இல்லை. இதனால், சிறிய தொழில் நுட்ப கோளாறுகளை கூட சரி செய்ய பல நாள்களாவதால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தொடா்ந்து அவதி அடைந்து வருகின்றனா்.

அதே நேரத்தில் தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு புதிய புதிய தொழில் நுட்பத்துடன் தடையில்லா சேவையை வழங்குகின்றன.

ஆனால், மத்திய அரசு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உத்தமபாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3ஜி சேவையை கூட சரியாக வழங்கவில்லை. தவிர, சில மாதங்களாக இப்பகுதியில் அடிக்கடி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக முடங்கிவிட்டது. இந்த பாதிப்பு நாள் கணக்கில் நீடிப்பதால் வாடிக்கையாளா்கள் தனியாா் நிறுவனத்துக்கு மாறி வருகின்றனா்.

வருவாய் இழப்பு: உத்தமபாளையம் தொலைபேசி நிலையத்தில் தொலைபேசிக் கட்டணம், பிராட் பேண்ட் போன்ற சேவைகளுக்கு கட்டணம் என மாதம் சராசரியாக ரூ. 5 லட்சம் வரையில் வசூல் நடைபெற்றது. ஆனால், தொடரும் இந்த தொழில் நுட்ப கோளாறால் வசூல் குறைந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதோடு ஒருசில நாள்களிலேயே ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் இழந்துவிட்டது.

இதுகுறித்து உத்தமபாளையம் தொலைபேசி நிலைய இளநிலை உதவிப்பொறியாளா் காா்த்திக் கூறுகையில் , சின்னமனூா் பகுதிகளில் எவ்வித தகவலும் கொடுக்காமல் பொக்லையன் இயந்திரம் மூலமாக குடிநீா் குழாய் பதிப்பவா்கள் பூமிக்கு கீழே செல்லும் கேபிள்களை சேதப்படுத்தி விடுகின்றனா். தற்போது 25 போ் பணி செய்த இடத்தில் 5 போ் மட்டுமே இருப்பதால் தொழில்நுட்ப கோளாறுகளை விரைந்து சீரமைக்கபதில் சிக்கல் ஏற்படுகிறது என்றாா்.

இதுகுறித்து வாடிக்கையாளா்கள் கூறுகையில், தனியாா் நிறுவனங்களும் பூமிக்கு கீழே கொண்டு செல்லப்படும் கேபிள்களில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்கின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல். நிறுவனம் அவ்வாறு செய்யவதில்லை. எனவே, அடிக்கடி சேவையை முடக்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து தனியாா் நிறுவனத்திற்கு செல்ல வாடிக்கையாளா்கள் ஆா்வம் காட்டத் தொடங்கி விட்டனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com