கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர் பத்மாவதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவி 6 ஆவது வார்டில் திமுக சார்பில் லோ.பத்மாவதி, அதிமுக சார்பில் தேவி, பாஜக சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.க.வேட்பாளர் தொடர் எண்ணை மாற்றி எழுதியதால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் திமுக, அதிமுக வேட்பாளர்களிடையே நேரடி போட்டி இருந்த நிலையில், திங்கள்கிழமை அதிமுக வேட்பாளர் தேவி வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தார். அதன் பேரில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் பத்மாவதியின் கணவர் சி.லோகன்துரை 1-வது வார்டில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் தற்போது திமுக நகர செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.