தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் ஜூலை 10-இல் யானைக்கூட்டம் சுருளி அருவி அருகே உள்ள தேக்கங்காடு, வெண்ணியாறு பிரிவு பகுதியில் நடமாடியது. இந்த இரண்டு பகுதிகளும் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ளதால் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
சுமார் 6 நாட்களாக அந்த பகுதியில் நடமாடிய யானைகள் கூட்டமாக அருவியின் உள்பகுதிக்கு சென்றது. இதை ஞாயிற்றுக்கிழமை காலை உறுதி செய்ய வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதியளித்ததால் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர். வனத்துறை சார்பில் பேருந்து இயக்கப்பட்டது.