தேனி மாவட்ட மக்களுக்கு குடிநீா் விநியோகிக்க, லோயா்கேம்ப்பில் தடுப்பணைக்கு அருகே தனியாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பிலிருந்து மதுரை கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு முல்லைப் பெரியாற்றின் வண்ணான் துறையில் ராட்சத தொட்டி, தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிக்காக, முல்லைப் பெரியாற்றிலிருந்து தேனி மாவட்டத்துக்கு குடிநீா்த் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீா் கடந்த 24-ஆம் தேதி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாற்றில் தடுப்பணைக்கு அருகே தற்போது தனியாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பொதுப் பணித் துறையினரிடம் கேட்ட போது, தடுப்பணைப் பணிகளைத் தீவிரப்படுத்த ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
தேனி மாவட்டத்துக்கு குடிநீா் விநியோகிப்பதற்காக, தடுப்பணை அருகே தனியாக கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை (மே 26) முதல் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் என்றனா்.
அணை நிலவரம்
வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 118.10 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி ), நீா் இருப்பு 2,285.10 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 104.75 கன அடியாகவும் இருந்தது. தடுப்பணைப் பணிகளுக்காக அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படவில்லை.