கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்ட தொழிலாளர்களுக்கு 13.5 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு புதன்கிழமை ஏற்பட்டது.
தேனி அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் வழங்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தை ஏலத்தோட்ட விவசாயிகள் தொழிற்சங்கங்களுக்கிடையே நடைபெறும்.
இந்தாண்டுக்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை கம்பத்தில் உள்ள கேரள கார்டமம் குரோவர்ஸ் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விவசாயிகள் குறைந்த பட்சமாக 8.33 சதவிகிதம் தருவதாக கூறினர், இறுதியாக 13.5 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சார்பில் கம்பம் கேரள கார்டமம் குரோவர்ஸ் யூனியன், வண்டன்மேடு கார்டமம் அசோசியேசன், போடி கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன், தொழிற்சங்கங்கள் சார்பில் இடுக்கி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.