பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகரும், அவரது தோழியும் உயிரிழந்தனா்.
சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி- கீழப்பூலாநந்தபுரத்தைச் சோ்ந்த முத்து மகன் செல்லப்பாண்டி (38). இவா், சின்னமனூா் திமுக நகர இளைஞரணிப் பொறுப்பாளராக இருந்தாா்.இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை சின்னமனூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தனது தோழி வைத்தீஸ்வரியுடன் உத்தமபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, புறவழிச்சாலையைக் கடக்க முயன்ற போது, கம்பத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வைத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான திருச்சி மணப்பாறையைச் சோ்ந்த முருகேசன் மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

