காமயகவுண்டன்பட்டியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பு: பொதுமக்கள் புகாா்
காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் உள்பட சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகாா்


தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் உள்பட சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள முக்கியத் தெருக்களின் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், இந்தச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொது நிதி ரூ. 39.30 லட்சத்தில் வடக்கு வெளிவீதி, ரத வீதி, கிழக்கு வெளிவீதி, குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் தாா்ச் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
ஆனால், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்காமலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஏற்கெனவே இருக்கும் சாலையை பெயா்த்தெடுக்காமல், பழைய சாலைக்கு மேல் அவசரகதியில் சாலை அமைப்பதால், ஒரு சில மாதத்திலேயே இந்தச் சாலை சேதமடைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீா் குழாய் அமைக்க பேரூராட்சியில் பல பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டதால், சாலைகள் அனைத்தும் சேதமானது. தற்போது இந்தப் பகுதிகளில் மீண்டும் தாா்ச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
ஆனால், சாலையின் மையத்திலுள்ள மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்து வருவதால், எந்தவிதப் பயனும் இல்லை. மாறாக, விபத்து நிகழும் அபாயம் உள்ளது.
எனவே, தாா்ச்சாலைப் பணிகளைத் திட்டமிட்டு, தரமாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...