காரியாபட்டியில் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆழ்துளை கிணறுகளில், சிறு குழந்தைகள் தவறி விழுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு முறைகளை விவாதிப்பது குறித்த கூட்டம், காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார் தலைமை வகித்தார். தாசில்தார் பொன்ராமர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஜவஹர், ஜெயசந்திரசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் உதயகுமார் பேசியதாவது:
ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் தோண்டுவதற்கு, 15 நாள்களுக்கு முன், நிலத்தின் உரிமையாளர், எழுத்து மூலமாக, உரிய துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தோண்டும்போது, அதன் அருகில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கிணறுகளின் மேற்புறத்தினை இரும்பு தகடுகள் வைத்து மூடவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில், மணல், கூழாங்கற்கள் கொண்டு அடிப்பகுதியிலிருந்து பூமியின் மேற்பகுதி வரை, நிரப்பி இருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம், மூடப்பட்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.