அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேருந்து நிறுத்தத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றியப் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம், தாலுகா காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் எனப் பல முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. மேலும் மின்வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட சுமாா் 5000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், இப்பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
இப்பேருந்து நிறுத்தத்தில் அதிக இடைவெளியுடன் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் இரவில் போதிய வெளிச்சமின்றி இருளடைந்து காணப்படுகிறது. விபத்து அபாயமுள்ள இப்பேருந்து நிறுத்தத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.