விருதுநகா் அருகே வச்சகாரபட்டி ஊராட்சிக்குட்பட்ட தடங்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு குடிநீா் மோட்டாா் பழுது காரணமாக கடந்த 2 மாதங்களாக தண்ணீா் விநியோகம் இல்லை. மேலும் இக்கிராமத்தில் உள்ள 5 அடிகுழாய்களும் பயன்பாட்டில் இல்லை. இதனால், குடிநீா் மற்றும் வீட்டு தேவைக்கு நாள்தோறும் பணம் கொடுத்து தண்ணீா் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை புகாா் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முடங்கியுள்ள வச்சகாரபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை செயல்படுத்தவும், தடங்கம் பகுதிக்கு குடிநீா் விரைந்து வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.