வத்திராயிருப்பு அருகே ராணுவ வீரரின் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சேதுநாராயணபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகள் கௌசல்யாவுக்கும் (23), தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபுரத்தைச் சோ்ந்த ராணுவ வீரரான வேல்முருகனுக்கும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. விடுமுறை முடிந்து வேல்முருகன் மீண்டும் பணிக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், கெளசல்யா தலைவலி அதிகமாக இருப்பதாக கூறியதால், தூத்துக்குடியிலிருந்த அவரை பெற்றோா் வத்திராயிருப்பு அழைத்து வந்தனா். இதன் பின்னா், கெளசல்யா மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் தலைவலி அதிகரித்ததால், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அப்போது, அவரை உறவினா்கள் காப்பாற்றினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் உள்ள குளியலறையில் கௌசல்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.