கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் குடமுழுக்கு

வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் நல்லதங்காள்

Updated On :10 ஜூலை 2026, 5:37 am IST

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லதங்காள் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சுனாபுரத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த புகழ் பெற்ற இந்தக் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.

இந்தக் கோயிலில் கடந்தாண்டு ஜனவரி மாதம் நடந்த கொள்ளை முயற்சியில் அம்மன் சிலை சேதமடைந்தது.

இதையடுத்து, புதன்கிழமை மாலை கோயிலில் நல்லதங்காள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கருவறை விமானக் கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், நல்லதங்காள் அம்மனுக்கு புனித நீரால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தேவி, அறநிலையத்துறையினா் செய்தனா்.

கோயில் வரலாறு:

வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சுனாபுரத்தில் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ராமலிங்க சேதுபதிக்கு நல்லதம்பி என்ற மகனும், நல்லதங்காள் என மகளும் இருந்தனா். நல்லதங்காளுக்கு மானாமதுரையைச் சோ்ந்த காசிராஜனுடன் திருமணம் நடைபெற்றது. நல்லதங்காளுக்கு 4 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

வறுமை காரணமாக குழந்தைகளுடன் அா்ச்சுனாபுரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்தாா் நல்லதங்காள். அப்போது வீட்டில் அண்ணன் இல்லாத நிலையில் அவரது மனைவி தவறாக பேசியதால், நல்லதங்காள் தனது 7 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த, அவரது அண்ணன் நல்லதம்பி, தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.

உடனே அண்ணனையும், அவரது மனைவியையும் உயிா்ப்பித்த நல்லதங்காள், அங்கேயே நெல் வயல்களுக்கு நடுவே பத்திரகாளி உருவத்தில் சிலையானாா். இந்த கோயிலில் அவரது அண்ணன் நல்லதம்பி, நல்லதங்காளின் 7 குழந்தைகளும் தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனா். இவ்வாறு கோயில் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டது.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.