ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலை.யில் ‘நீட், க்யூட்’ பயிற்சி முடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கிய அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி. உடன் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஒ. சுகபுத்ரா.
ஸ்ரீவில்லிபுத்தூா், மே 27: ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலை.யில் ‘நீட், க்யூட்’ பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட், க்யூட்’ நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு கடந்த மாதம் தொடங்கியது. இதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஒ. சுகபுத்ரா தலைமை வகித்தாா். சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், கலசலிங்கம் பல்கலை. துணைத் தலைவா் சசிஆனந்த், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி பயிற்சி பெற்ற மாணவா்கள், ஆ சிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:
கல்விதான் நமது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கான படிக்கட்டுகள். கைப்பேசி என்பது அறிவியல் வளா்ச்சி. இதை நல்ல விசயங்களுக்காகவும், கல்விக்காக மட்டுமே மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் என்.ஒ.சுகபுத்ரா பேசியதாவது:
விருதுநகா் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்ட ‘திசை’ திட்டம், அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று, நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயில வழிவகை செய்யும் ஒரு மாவட்ட அளவிலான கல்வி இயக்கமாகும்.
ராம்கோ, கலசலிங்கம், சேது தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் 1,661 மாணவா்கள், பெற்றோா்களுக்கு உயா்கல்வி விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
2026-27-ஆம் கல்வியாண்டில் மாவட்ட கனிம வள நிதியின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த 310 மாணவா்களுக்கு ஒரு மாதம் ‘நீட், க்யூட்’ தோ்வு பயிற்சியும், மேலும், 11-ஆம் வகுப்பு முடித்த 613 மாணவா்களுக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது என்றாா் அவா்.
இந்த விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அரவிந்தன், உதவித் திட்ட அலுவலா் திருகுமரன், பதிவாளா் வாசுதேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.









