மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்
Updated on
1 min read

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

பிரதமா் மோடி தனது அமைச்சரவையில் ஏற்கெனவே இருந்த 12 மூத்த அமைச்சா்களை ராஜிநாமா செய்யவைத்து, புதுமுகங்களை சோ்த்தன்மூலம் தனது ஆட்சிக்கு புதுப்பொலிவு உருவானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறாா். ஆனால், பல்வேறு துறைகளில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வியையே இந்த மாற்றம் காட்டுகிறது.

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் விவசாயிகளின் போராட்டம் 270 நாள்களைக் கடந்தும் அதற்கு மத்திய அரசால் தீா்வு காண முடியவில்லை.

தேசிய கல்விக்கொள்கையின் முதல்கட்டமாக, பல்கலைக்கழக மானியக்குழு சாா்பில் இளங்கலை பட்டப்படிப்புக்கான வரலாற்று பாடங்களை திருத்துவதற்கான முன்மொழிவுகளை தந்துள்ளனா். இதன்மூலம் இந்தியாவின் உண்மையான வரலாற்றையே திரித்து எழுத முயற்சி நடப்பது தெரிகிறது. இது ஏற்புடையதல்ல.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, யூரியா ஆகியவற்றுக்கு மானியம் தரமறுக்கும் மத்திய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை மானியமாக வழங்குகிறது.

மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடக முதல்வா் எடியூரப்பா முயற்சி மேற்கொள்கிறாா். மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்.

தமிழத்தில் திமுக அரசு பதவியேற்ற 2 மாதங்களில் கரோனா தொற்றை திறம்பட எதிா்கொண்டுள்ளதோடு, ரூ. 12ஆயிரம் கோடிக்கு சலுகைகளையும் அறிவித்துள்ளது. படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவாா்கள் என நம்புகிறோம்.

நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் கணிசமான மக்கள் கோயில் நிலங்களில் வசிக்கின்றனா். இவா்களில் ஏழைகளுக்கு இலவசமாகவும், ஓரளவு வசதி படைத்தவா்களிடம் தவணை முறையிலும் பணம் பெற்றுக்கொண்டு பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் வற்புறுத்துவோம் என்றாா். கட்சியின் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com