புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் நிதி நெருக்கடி மிக்க சூழலில் பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தற்போது உத்தரவிடவேண்டிய அளவுக்கு என்ன அவசியம் எழுந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட் காரைக்காலில் புதன்கிழமை கூறியது: புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகள் 3 பேரை எம்.எல்.ஏக்களாக நியமனம் செய்து அக்கட்சியின் உயர்மட்ட தலைவர் போல ஆளுநர் நடந்து கொண்டார். அந்த நியமனமே மரபை மீறிய வகையில் நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சட்டப்பேரவையில் அவர்கள் 3 பேரும் முறையாக இதுவரை பொறுப்பேற்கவும் இல்லை. அதிகாரப்பூர்வ நியமன எம்.எல்.ஏ.க்களாக அவர்கள் பணியாற்றக்கூட இல்லை. இந்த நிலையில் அவர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அளவில் என்ன அவசரம், அவசியம் எழுந்துள்ளது?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக வழங்க முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. இச்சூழலில் ஆளுநரின் இந்த அறிவிப்பு மாநில நலனுக்கோ, மக்களுக்கோ எவ்விதப் பயனும் தராது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.