தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

தூர்வாரப்படும் குளங்கள் பட்டியலில் தருமபுரம் பகுதி குளங்களை சேர்க்க வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் தூர்வாரப்படும் குளங்கள் பட்டியலில் தருமபுரம் பகுதி குளங்களையும் சேர்த்து, துரிதமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :27 செப்டம்பர் 2019, 11:25 pm


காரைக்கால் மாவட்டத்தில் தூர்வாரப்படும் குளங்கள் பட்டியலில் தருமபுரம் பகுதி குளங்களையும் சேர்த்து, துரிதமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில், நம் நீர் திட்டத்தின்கீழ் அரசுத் துறையினர், தனியார் நிறுவனத்தினர், கோயில் நிர்வாகத்தினர் நிதியுதவியில் குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 165 குளங்கள் தூர்வாரி முடித்துள்ளதாகவும், பல குளங்களில் பணிகள் நடந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள தருமபுரம் பகுதியில் கோயில் மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான குளங்களாக வண்ணான் குளம், இச்சில் குளம், பெரிய குளம், பறவைக்குளம் ஆகிய 4 குளங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தோர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை கூறியது: காரைக்காலில் ஏராளமான குளங்கள் தூர்வாரப்பட்டு, காவிரி நீர் வருவதைக்கொண்டு நிரப்பும் பணிகள் செய்யப்படுவது பாராட்டுக்குரியது. மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது. தருமபுரம் பகுதி என்பது பாடல்பெற்ற தலமான யாழ்முரிநாதர் கோயில் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் கொண்ட பழைமையான கிராமமாகும். 100 ஆண்டுகள் முற்பட்ட குளங்கள் இந்த பகுதியில் உள்ளன. இந்த குளங்கள் வற்றாக்குளங்களாக இருந்த நிலையில், பொதுமக்கள் குளிக்கவும், கால்நடைகளை குளிக்கச் செய்யவும் என பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இக்குளங்களைச் சுற்றி கருவேல மரங்கள் உள்ளிட்ட புதர் மண்டி, கரைகள் பலமிழந்து, குடியிருப்பு மக்கள் சிலரால் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு வந்துவிட்டது.
மாவட்ட நிர்வாகம் குளங்கள் தூர்வாரக்கூடிய பட்டியலில் இக்குளங்களையும் சேர்த்து, உடனடியாக தூர்வாரி புதிதாக தண்ணீர் நிரப்ப ஏதுவாக தயார்படுத்தினால், தரும்புரம்  சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர பெரும் வாய்ப்பாக இது அமையும். குளத்தை தூர்வாரி, சுற்றுவட்டாரத்தினருக்கு உரிய விழிப்புணர்வு, எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்து பராமரிக்க அறிவுறுத்தல் செய்ய முன்வரவேண்டும். இந்தவிவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.