

காரைக்காலில் 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீா் தேங்குவது உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காரைக்கால் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்யத்தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலையிலிருந்து தீவிரமாகியுள்ளது. இதனால், தாழ்வானப் பகுதி மற்றும் இணைப்புப் பகுதி சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த தொடா் மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் கடலுக்கு செல்லும்போது, தாழ்வானப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளின் வழியே விளைநிலங்களில் புகுந்தது. இந்தத் தண்ணீரை வடியச் செய்து, உரிய உரமிட்டு பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் முயன்று வருகின்றனா்.
இந்நிலையில், தற்போது பெய்யும் மழை விவசாயிகளுக்கும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையோர ஹைவே நகா் அருகே மழையால் பெரிய மரம் வியாழக்கிழமை இரவு வேரோடு சாய்ந்தது. மழை பெய்தாலும், கடல் இயல்பு நிலையிலேயே உள்ளது. இதனால், காரைக்கால் மீனவா்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.