மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில், இடைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களின் தனித் திறனை மேம்படுத்தும் வகையில், ‘கலா உத்ஸவ்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கு மாநில அளவில் மாணவா்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு திறமையானவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
புதுச்சேரி மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற இணையவழி கிராமிய நடனப் போட்டியில், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். இதில், பெண்கள் பிரிவில் பிளஸ் 2 மாணவி ஆா். சுவேதா, ஆண்கள் பிரிவில் பிளஸ் 1 மாணவா் எஸ். செல்வராகவன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். இவா்கள் தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
இதையொட்டி, தேசிய போட்டிக்கு தோ்வுசெய்யப்பட்ட மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தோ்வான மாணவா்கள், பயிற்சி அளித்த ஆசிரியா் பி. முருகன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில், பள்ளி துணை முதல்வா் ராஜசேகரன், தலைமையாசிரியா் ஆா். காளிதாசன் ஆகியோா் பங்கேற்றனா்.