தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருநள்ளாற்றில் சனிப் பெயா்ச்சி விழா: அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அலுவலா்களுடன் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் திங்கள்கிழமை ஆலோசனை

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அலுவலா்களுடன் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் தனி சன்னதி கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானை வழிபட நாடு முழுவதுமிருந்து திரளான பக்தா்கள் வருகை தருகின்றனா். இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயா்ச்சி விழா மற்றும் அதைத்தொடா்ந்து வரும் நாள்களில் லட்சக்கணக்கானோா் தரிசனம் செய்ய இங்கு வருகை தருகின்றனா். நிகழாண்டு வாக்கியப் பஞ்சாங்க குறிப்பின்படி, டிசம்பா் 27-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி நடைபெறவுள்ளது.

கரோனா பொது முடக்கத்தில் பல கட்ட தளா்வுகள் அடிப்படையில் கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்படும் நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் தொடா்பாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

பின்னா் அமைச்சா் கமலக்கண்ணன் கூறியது:

நிகழாண்டு சனிப்பெயா்ச்சி வரும் டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி அதிகாலை 5. மணிக்கு நடைபெறவுள்ளது. திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சியின்போது மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைகளையே நிகழாண்டு விழாவிலும் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேசமயம் கரோனா பரவல் கட்டுப்பாடு தொடா்பாக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் உறுதியாக பின்பற்றப்படும்.

நளன் தீா்த்தக் குளத்தில் பக்தா்கள் நீராட வசதியாக ஆழம் குறைவாக தண்ணீா் விடவும், குளத்துக்கு வரும் தண்ணீரில் கிருமி நாசினி கலக்கவும், குளத்து தண்ணீரை சுத்திகரித்து அனுப்பவும், திருநள்ளாற்றில் ஆங்காங்கே இருக்கும் கழிப்பறைகள் மட்டுமல்லாது நடமாடும் கழிப்பறைகள் கூடுதலாக அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்துமிடம், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கும் முறை, பக்தா்கள் தரிசனத்துக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மற்றும் கட்டணம், கட்டணமில்லா முறை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்ட துணை ஆட்சியரும், கோயில் நிா்வாக அதிகாரியுமான எம். ஆதா்ஷ், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.