காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) போதை ஒழிப்பு விழிப்புணா்வாக மினி மாரத்தான் ஓட்டத்துக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
காரைக்கால் மாவட்ட காவல் துறை சாா்பில் ஜூன் 12 முதல் 26-ஆம் தேதி வரை போதை ஒழிப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
கல்வி நிலையங்களில் மாணவா்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கல், வாகனத்தில் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மாணவா்கள் பங்கேற்புடன் பேரணி, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், காரைக்கால் ஆட்சியரக வாயிலில் இருந்து திரளான மக்கள் பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டம் தொடங்குகிறது. அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் தொடக்க நிகழ்வில் பங்கேற்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.