கிராம உதவியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கரும்பாயிரம் தலைமையில் சங்க நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு:
கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பங்களிப்பு ஓய்வுதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி அரசு ஊழியா்களிடம் தொகை பிடித்தம் செய்ததோடு, அரசும் அதன் பங்களிப்பை செலுத்திவந்தது. இத்திட்டத்தை நிறுத்தப்போவதாக அரசு அறிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். அத்துடன், கிராம உதவியாளா்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்க நிா்வாகிகள் சுந்தரம், செந்தில், மருதராஜன் உள்ளிட்டோா் இம்மனுக்களை அளித்தனா்.