தமிழக அரசின் சொத்து வரி உயர்வை அமல்படுத்துவது தொடர்பாக, சீர்காழி நகர்மன்ற அவசரக் கூட்டம் , தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில், சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக மற்றும் சுயேட்சை உள்ளிட்ட 24 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், அதிமுக உறுப்பினர்கள் கருப்பு துண்டு அணிந்தும், தேமுதிக உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சொத்து வரியால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவசர ஆலோசனை கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் ராஜ கனேஷ் தீர்மானம் படித்து முடித்தவுடன், கூட்ட அரங்கிலிருந்து, அதிமுக கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமாமணி, நாகரத்தினம், கலைச்செல்வி மற்றும் தேமுதிக கவுன்சிலர் ராஜசேகர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி வாயிலில் நின்றுகொண்டு சொத்து வரி உயர்வை எதிர்த்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.