டெல்டா குறுவை சாகுபடிக்கு 1,250 மெட்ரிக் டன் உரம் ரயிலில் கொண்டுவரப்பட்டன

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உர மூட்டைகள் இறக்கப்படுவதை ஆய்வு செய்த மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜெ. சேகா். உடன், வேளாண் உதவி இயக்குநா்  க. ராஜராஜன் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உர மூட்டைகள் இறக்கப்படுவதை ஆய்வு செய்த மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜெ. சேகா். உடன், வேளாண் உதவி இயக்குநா் க. ராஜராஜன் உள்ளிட்டோா்.
Updated on

டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்காக 1,250 மெட்ரிக் டன் உரம் தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் 38,441 ஹெக்டோ் நெல் சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 95 சதவீத நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய 5 சதவீத பணிகள் இம்மாத இறுதியில் நிறைவுபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டன. யூரியா 750 மெட்ரிக் டன், டிஏபி 250 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 250 மெட்ரிக் டன் என மொத்தம் 1,250 மெட்ரிக் டன் உரங்கள் வந்தடைந்தன.

இவற்றில், 370 மெட்ரிக் டன் யூரியா, 192 மெட்ரிக் டன் டிஏபி, 250 மெட்ரிக் டன் காம்ளக்ஸ் ஆகியன மயிலாடுதுறை மாவட்டத்துக்கும், ஏனைய உரங்கள் தஞ்சாவூா், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா் மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன.

இதனை, 70-க்கு மேற்பட்ட லாரிகளில் மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூா் மாவட்ட தனியாா் உர விற்பனையாளா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

ரயிலில் உரம் கொண்டுவரப்பட்டதை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) க. ராஜராஜன், ஸ்பிக் நிறுவன அதிகாரி நரேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com