/

"கதை கேட்பது, மாணவர்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும்'

கதை கேட்பது, மாணவர்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும் என்றார் நாகப்பட்டினம் கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்கத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கி. பாலசண்முகம்.

Updated On :22 ஜூலை 2015, 12:26 am

கதை கேட்பது, மாணவர்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும் என்றார் நாகப்பட்டினம் கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்கத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கி. பாலசண்முகம்.

இந்த சங்கத்தின் சார்பில் கதை கேளு, கதை கேளு என்னும் தலைப்பில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்த பயிற்சி குறித்து கி. பாலசண்முகம் கூறியது:

கூட்டுக் குடும்பங்கள் குறைந்ததாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை குறிக்கோளாகக் கொண்டு கற்பித்தல் முறையை பின்பற்றுவதாலும் கதை கூறுதல், கதை கேட்டல் என்ற நிகழ்வே இன்றைய சமுதாயத்தில் மறைந்து வருகிறது. தொடக்கநிலை மாணவர்களின் கவனிக்கும் திறனை அதிகரிப்பதில் கதை கூறுதல் முக்கிய பங்காற்றுகிறது.

பள்ளிகளில் இந்நிகழ்வை கொண்டுவருவதற்காக இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள், மாணவர்களுக்கு பாடங்களை எவ்வாறு எளிய முறையில் புரியவைப்பது என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

முதல் அமர்வில் வகுப்புகளில் குழந்தைகளுக்கு கதை சொல்வதின் அவசியம் மற்றும் கற்பித்தலில் கதை சொல்லும் முறையின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடக்க நிலை வகுப்பு குழந்தைகளுக்கு கதை சொல்வதன் மூலம் ஆசிரியர் மாணவர் உறவு பலப்படுகிறது என்பதையும், எண்கள், காடுகளில் உள்ள விலங்குகளின் பெயர்கள், நிலத்தின் அமைப்புகள் ஆகியவை சுலபமாக மாணவர்களுக்கு அறிமுகமாகிறது என்பதையும் ஆசிரியர்களுக்கு உணர்த்தப்பட்டது.  இரண்டாவது அமர்வில் கதை சொல்லும் உத்திகள் குறித்த பயிற்சியில் ஓவியங்கள் வரைவது மற்றும் பொம்மைகள் மூலம் கதாபாத்திரங்களை உருவாக்கி கதை கூறுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மூன்றாவது அமர்வில் கதை சொல்லுதல் மூலமாக அறிவியல் சமூகவியல் மற்றும் மொழிப் பாடங்களை எவ்வாறு கற்பிப்பது என பயிற்சியளிக்கப்பட்டது என்றார்.

நிகழ்ச்சியில், குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் காமராஜ், ஆசிரியர் ந. எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.