நாகை மாவட்டத்தில் நீடித்து வந்த கன மழையின் காரணமாக இதுவரை 806 வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை சீற்றம் குறைந்து, வெயில் தொடங்கியிருப்பதால் சேத எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் கடந்த அக். 30-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை பலத்த மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் மழை சீற்றம் குறைந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கன மழை மற்றும் வெள்ளப் பெருக்குக் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கடந்த அக். 30-ஆம் தேதி முதல் நவ. 8-ஆம் தேதி வரையிலான காலத்தில் மழை மற்றும் வெள்ளப் பெருக்குக் காரணமாக நாகை மாவட்டத்தில் 806 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுகிறது. சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை (வட்டம் வாரியாக) : வேதாரண்யம் - 307. தரங்கம்பாடி - 206. நாகப்பட்டினம் - 203. சீர்காழி - 175. மயிலாடுதுறை - 76. கீழ்வேளூர்- 48. குத்தாலம் - 39. திருக்குவளை - 22.
கால்நடைகள் இறப்பு...
கனமழையின் காரணமாக இதுவரை 291 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுகிறது. உயிரிழந்த கால்நடைகளின் எண்ணிக்கை (வட்டம் வாரியாக) : சீர்காழி - 67. நாகப்பட்டினம் - 47. தரங்கம்பாடி - 43. மயிலாடுதுறை - 35. வேதாரண்யம் - 30. குத்தாலம் - 27. கீழ்வேளூர், திருக்குவளை - 21.
கனமழை முடிந்து வெயில் தொடங்கியிருப்பதால், வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டு, வெயிலை எதிர்கொள்ளும் போது மண்சுவர்கள் வலுவிழப்பது வழக்கம் என்பதால், வரும் நாள்களில் வீடுகள் சேதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.