நாகை மாவட்டம், குத்தாலத்தில் பூக்கட்டுவோர் பேரவை மற்றும் ஸ்ரீராம் நிதி நிறுவனம் மூலம் பூஜாரிகள், பூக்கட்டுவோர், அருள்வாக்கு கூறுவோர், கிராமிய கலைஞர்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் தஞ்சை மண்டலத் தலைவர் வழக்குரைஞர் இராம. சேயோன் தலைமை வகித்தார். திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் இளவரசு ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கியதாவது:
பூக்கட்டுவோர் துன்பங்கள் இல்லாமல் நன்றாக வாழ்ந்தால்தான் இறை பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும். இல்லறத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் நல்லனவற்றை மட்டுமே செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தன் பெறுப்புகளை உணர்ந்து நடக்க வேண்டும். இறைவனை வழிபடுவதற்கு முக்கியமான ஒன்று பூ. அத்தகைய பூக்களை கட்டும் நீங்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெற வேண்டும் என்றார்.
விழாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் பங்கேற்று, பூக்கட்டுவோர் 25 பேருக்கு கடன் உதவி வழங்கி பேசியது:
பூக்கட்டுவோர் மொத்தம் 25 லட்சம் பேர் உள்ளனர். நாகை மாவட்டத்தில் தற்போது இரண்டாவது முறையாக கடன் உதவி வழங்கப்படுகிறது. பூக்கட்டுவோருக்கு அரசு எந்த சலுகைகளும் செய்து தரவில்லை. பிறப்பு இறப்பில் இருந்து விடுபட குருமார்களையும், இறை வழிபாட்டையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு காரணம் கிராம பூஜாரிகள் தான். ஏழை எளிய பூஜாரிகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றார்.
இதில் பூக்கட்டுவோர் பேரவை மாநில அமைப்பாளர் வேணுமாதவன், நாகை, திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் பாவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.