காதலித்து ஏமாற்றியது தொடர்பாக பெண் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் நாகை மகளிர் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
நாகை அருகே உள்ள கொங்கராயநல்லூர், காலனி தெருவைச் சேர்ந்தவர் பேபிஷாலினி (25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ம. அன்பரசன் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பேபிஷாலினி திருமணத்துக்கு வற்புறுத்திய போது அன்பரசன் மறுத்தாராம்.
இதுகுறித்து பேபிஷாலினி நாகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து ஒரு மாத காலத்துக்கு மேலாகியும், அவரது புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், பேபிஷாலினி புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், உடனடியாக அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பேபிஷாலினி மற்றும் அவரது உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை நாகை மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பேபிஷாலினி புகார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.