பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் தமிழக அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்குத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
இதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளில் பயிலுவோரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை, மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் அல்லது www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்தில் அறியலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.