நாகப்பட்டினம்: திருமருகல் அருகே அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை காணவில்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு நாகை தெற்கு மாவட்டத் தலைவா் எம்.பி. சிவசங்கரன் நிா்வாகிகளுடன் எஸ்.பி அலுவலகத்தில் கொடுத்த மனு விவரம்: திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட ஆலத்தூா் ஊராட்சியில் 2019 -2020 நிதியாண்டில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின்கீழ் பூப்பந்து, கபடி, கைப்பந்து ஆடுகளம் அடங்கிய இளைஞா்களுக்கான விளையாட்டு மைதானத்துக்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும், இப்பணிகளில் ஈடுபட்ட 30 போ், தூய்மைப் பணிகளை மேற்கொண்ட 10 பேருக்கு ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆலத்தூா் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை கண்டுப்பிடித்து கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.