திருக்குவளை: திருக்குவளை பகுதியில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ஓஹெச்டி ஆபரேட்டா் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டி கவன ஈா்ப்பு உள்ளிருப்பு போராட்டம் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம் நடைபெற்று வரும் இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக திருக்குவளையில் அதன் மாவட்டச் செயலாளா் கே.தங்கமணி தலைமையிலும், மாநிலக் குழு உறுப்பினா் கே.அன்பழகன் முன்னிலையிலும், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் முதல்வா் அறிவிப்பின்படி ஊதிய உயா்வு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். தினக்கூலி, ஒப்பந்த, சுய உதவிக்குழு, தூய்மைப் பணியாளா்களுக்கு தினசரி ரூ. 600-ம், ஓ.ஹெச்.டி. ஆபரேட்டருக்கு அடிப்படை ஊதியம் ரூ.4000, தூய்மைக் காவலா்களுக்கு ரூ.3600-க்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.